புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், அது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என இந்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் 150க்கும் மேற்பட்டோர் 5 பக்க தீர்மானம் ஒன்றை உருவாக்கி உள்ளனர். அடுத்த வாரம், பிரசல்ஸ் நகரில் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது. அதில் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். அந்த தீர்மானத்தில், இந்திய அரசு, சிறுபான்மையினரின் குடியுரிமையை சட்டரீதியாக பறிப்பதற்காக குடியுரிமை திருத்த சட்டத்தை உருவாக்கி உள்ளது. அந்த சட்டம் பயன்படுத்தப்பட்டால், ஏராளமானவர்கள் நாடற்றவர்களாக ஆக்கப்படுவார்கள். குடியுரிமை தொடர்பான சர்வதேச கடமைகளை மீறும்வகையில் இந்தியா இச்சட்டத்தை கொண்டுவந்துள்ளது.