சென்னை: ‘தொடர் விழிப்புணர்வு நடவடிக்கையால் எம்டிசியில் உயிரிழப்பு விபத்துக்கள் 82 ஆக குறைந்துள்ளது’ என மேலாண் இயக்குநர் பேசினார்.
சென்னையில் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் தலைமையகமான பல்லவன் இல்லத்தில் குடியரசு தினவிழா நேற்று சிறப்புடன் கொண்டாடப்பட்டது. மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கணேசன், தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அவர் ஆற்றிய உரையில், ‘சென்னை பெருநகர பொதுமக்களின் போக்குவரத்துத் தேவையினை பூர்த்தி செய்வதில், மாநகர் போக்குவரத்துக் கழகம் பெரும்பங்காற்றி வருகிறது. சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தொடர் நடவடிக்கையின் பயனாக கடந்த இரண்டு ஆண்டுகளில் 112 ஆக இருந்த உயிரிழப்பு விபத்துக்கள், 82 ஆக குறைந்துள்ளது, பாராட்டுக்குரியது. இதனை இனி வரும் ஆண்டுகளில் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். விபத்தில்லாமலும், பாதுகாப்பான முறையிலும் பேருந்துகளை இயக்கி, பயணிகளின் போக்குவரத்துத் தேவையினை நிறைவேற்றிட வேண்டும்’ எனத்தெரிவித்தார்.