கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய கணவன்: போலீஸ் விசாரணையில் சிக்கினார்

பூந்தமல்லி: மனைவியை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டார். சென்னை மதுரவாயல், கன்னியப்ப முதலி தெருவைச் சேர்ந்தவர் ஜெயவேல் (38), சொந்தமாக லோடு ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது மனைவி திலகம் (36), இவர் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்து வந்தார். தம்பதிக்கு சஞ்சய் (12),  என்ற மகனும், ஜனனி (11), என்ற மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு குடும்பத்தகராறில் தனது மனைவி கோபித்துக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக மதுரவாயல் போலீசாருக்கு ஜெயவேல் தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு மதுரவாயல்  போலீசார்  வந்து பார்த்தபோது திலகத்தின் உடல் கட்டிலில் கிடத்தப்பட்டு இருந்தது.

இதையடுத்து திலகத்தின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திலகம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான தடயங்கள் எதுவும் அங்கு இல்லை.  முகத்தில் காயம் இருந்துள்ளது. இதனால் சந்தேகத்தின் பேரில் ஜெயவேலை அழைத்து விசாரணை மேற்கொண்டதில் மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியதை ஒப்புக்கொண்டார்.  இதுகுறித்து போலீசார் கூறுகையில், லோடு ஆட்டோ ஓட்டி வந்த ஜெயவேலுக்கு  சந்தியா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில் அந்த பெண்ணின் பெயரை  லோடு ஆட்டோவிலும்  எழுதி வைத்துள்ளார். இந்த தகவல் அறிந்து திலகம் கணவரிடம் கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது.  

இதனால் ஆத்திரமடைந்த ஜெயவேல் மனைவியை தீர்த்து கட்ட முடிவு செய்தார். சம்பவத்தன்று கணவனிடம் திலகம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது ஆத்திரமடைந்த ஜெயவேல், திலகத்தை சரமாரியாக தாக்கி தலையணையை  முகத்தில் வைத்து அமுக்கி பின்னர் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் கொலையை மறைக்க தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஜெயவேலை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: