புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று குடியரசு தின ெகாண்டாட்டத்துக்கு இடையிலும் இந்த போராட்டங்கள் பல இடங்களில் நடந்தது. அரசியலமைப்பு சட்டத்தில் இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதனால், குடியுரிமை திருத்தச் சட்டத்தில் (சிஏஏ), ஒரு மதத்தினரை மட்டும் விலக்கி வைத்துள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனவேதான், சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களில், அரசியலமைப்பு சட்ட வாசகங்கள் படிக்கப்படுகின்றன.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு அரசியலமைப்பு சட்டப் புத்தகத்தை அனுப்ப காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் டிவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்ட பதிவில், ‘விரைவில் அரசியலமைப்பு சட்டப் புத்தகம் உங்கள் (பிரதமர் மோடி) கைகளுக்கு வந்து சேரும். நாட்டை பிளவுப்படுத்தும் அதே நேரத்தில் சற்று ஓய்வு கிடைத்தால் இதை படித்துப் பாருங்கள்,’ என்று கூறியுள்ளது. இதனுடன், அமேசான் நிறுவனத்தில் இந்த புத்தகத்தை ஆர்டர் செய்ததற்கான ரசீது மற்றும் காந்தி சமாதியில் அரசியலமைப்பு விதிகளை படிக்கும் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன், ராகுல், பிரியங்கா ஆகியோரின் வீடியோக்களையும் இணைத்துள்ளது.