துருக்கியை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31-ஆக உயர்வு... மீட்பு பணிகள் தீவிரம்

எலஜிக்: துருக்கி நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள எலஜிக் மாகாணத்தின் சிவ்ரைஸ் நகரில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட பூகம்பத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது. ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். அங்கு காணாமல் போன 30 பேரை தேடும்  பணி நடக்கிறது. துருக்கி நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ளது எலஜிக் மாகாணம். இங்குள்ள சிவ்ரைஸ் நகரில், நேற்று முன்தினம் இரவு பூகம்பம் ஏற்பட்டது. இது மிக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஹசர் ஏரியின் கரையில் அமைந்துள்ளது. இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகள் பதிவாகியது.

இதனால் வீடுகளில் உள்ள மேஜை, நாற்காலிகள் எல்லாம் மக்கள் மீது விழுந்துள்ளது. சுமார் 30 விநாடிகள் இந்த பூகம்பம் நீடித்தது. இதனால் மக்கள் பீதியில் தெருவுக்கு ஓடி வந்தனர். வெளியே குளிர் அதிகமாக இருந்ததால், பலர் குழப்பத்துடன் வீடுகளுக்கு உள்ளேயே இருந்தனர். நில நடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 22 பேர் பலியானதாகவும், 1,015 பேர் படுகாயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில், நில நடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 31 ஆக அதிகரித்துள்ளது. ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நில நடுக்கம் பாதித்த பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான மீட்பு, தேடல் குழுக்கள் விரைந்து சென்று மீட்பு பனிகளில் ஈடுபட்டு வருகின்றன. பூகம்ப பாதிப்பு குறித்து துருக்கி அதிபர் எர்டோகான் அளித்த பேட்டியில், ‘‘பூகம்பம் துருக்கி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பூகம்பம் பாதித்த மக்களுக்கு உதவ அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. நிலைமை  தற்போது கட்டுக்குள் உள்ளது. பூகம்பத்தால் ஏற்பட்ட சேதங்கள் இனிமேல் மதிப்பிடப்படும்’’ என்றார்.

Related Stories: