எழும்பூர் உட்பட 5 ரயில் நிலையங்கள் ரூ109.55 கோடியில் மேம்படுத்தப்படும்: ரயில்வே பொதுமேலாளர் தகவல்

பெரம்பூர்: எழும்பூர், மதுரை, சேலம், பாலக்காடு, திருச்சி ஆகிய ரயில்நிலையங்கள் ரூ109.55 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகிறது என குடியரசு தினவிழாவில் தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே மைதானத்தில் 71வது குடியரசு தின விழா நடந்தது. தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றிவைத்தார்.  ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

விழாவில், பொதுமேலாளர் ஜான் தாமஸ் ேபசியதாவது: சென்னையில் தண்ணீர் பிரச்னை இருந்தபோது ஜோலார் பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டுவர தென்னக ரயில்வே உதவியது. கடலூரிலிருந்து மயிலாடுதுறை வரை 74 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின்மயமாக்கல் பணி, திருவாரூரில் இருந்து காரைக்கால் துறைமுகம் வரை 40 கிலோ மீட்டர் தூரத்துக்கு மின்மயமாக்கல் பணி முடிந்து வரும் மார்ச் மாதத்தில் ரயில் சேவை தொடங்கப்படும். மேலும் சென்னை எழும்பூர், மதுரை, சேலம், பாலக்காடு, திருச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்களை ரூ109.55 கோடி செலவில் மேம்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரயில்வே ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால் ரயில் விபத்து குறைந்துள்ளது” என்றார். நிகழ்ச்சியின்போது, பயிற்சி அளிக்கப்பட்ட நாய்கள் எவ்வாறு வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கின்றன, அதை எவ்வாறு வீரர்கள் செயலிழக்க வைக்கின்றனர் போன்ற காட்சிகள் தத்துரூபமாக பொதுமக்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டன. இதில், ரயில்வே தொழிற்சங்க தலைவர் கண்ணையா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: