×

ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக தொடரும் எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் 40 ஊராட்சி கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றம்

நாகை: ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 40 ஊராட்சி கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் காவிரிப்படுகையை 2 மண்டலங்களாக பிரித்து மொத்தம் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு கடந்த ஆண்டு அனுமதி அளித்தது. பிரிவு 1ல் விழுப்புரம், புதுச்சேரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 116 ஹைட்ரோ கார்பன் கிணறுகள், பிரிவு 2ல் கடலூர் முதல் நாகை வரையுள்ள பகுதிகளில் 158 கிணறுகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது. இதன்பின், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கு விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், மாணவர்கள், தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் மனிதச் சங்கிலி, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.  இந்நிலையில், 5வது ஏலத்திற்கான அறிவிப்பு கடந்த 15ம் தேதி வெளியிடப்பட்டது. மார்ச் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில், மொத்தம் 19,789 சதுர கி.மீ. பரப்பளவில் 11 ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவதற்கான உரிமங்கள் வழங்கப்பட உள்ளன. இதில் 4,064.22 சதுர கி.மீ. பரப்பளவு உள்ள ஒரு திட்டம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செயல்படுத்தப்பட இருக்கிறது.

புதுச்சேரியில் தொடங்கி காரைக்கால் வரையிலும், தமிழகத்தில் கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் செயல்படுத்துவதால் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு கிணறுகள் அமைப்பதில் ‘ஏ கிரேடு’, ‘பி கிரேடு’ என பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ கிரேடு’ அமையும் பகுதியில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். சுற்றுச்சூழல் துறை அனுமதி பெற வேண்டும் என விதி உள்ளது. அதை மத்திய அரசு மாற்றி ‘பி கிரேடு’ என்ற நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில் நாட்டின் 71வது குடியரசு தின விழா, நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அனைத்து கிராமங்களிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 40 ஊராட்சி கிராம சபை கூட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருவாரூர் மன்னார்குடி அருகே 40 ஊராட்சி கிராம சபை கூட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோட்டூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இருள்நீக்கி, புழுதிக்குடி, சோந்தமங்களம் உள்ளிட்ட 40 ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுக்கோட்டை வடகாடு, நெடுவாசல், நத்தம்பண்ணை உள்ளிட்ட ஊராட்சிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம். தஞ்சை கத்தரிநத்தம், பூதலூர், ஊரணிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம். வேலூர்  கிருஷ்ணாபுரம் கிராமத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம். மாப்படுகை, உளுத்தகுப்பை, வள்ளலாகாரம், மேலையூர்  ஆகிய ஊராட்சிகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.


Tags : protest ,village council meetings ,Tamil Nadu , Hydro Carbon, Tamil Nadu, Panchayat Rural Council Meeting, Resolution passed
× RELATED குஷ்புவின் உருவ படத்தை எரித்து திமுக...