சென்னை: காஷ்மீரில் 70 லட்சம் மக்களின் சுதந்திரத்தை மத்திய அரசு பறித்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். எந்த குற்றச்சாட்டும் இன்றி காஷ்மீரில் பலர் கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். குடியரசு தின வாழ்த்தை தெரிவித்துள்ள ப.சிதம்பரம் அரசியலமைப்பின் உயிர் சுதந்திரத்தில் உள்ளதாக தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். சுதந்திரத்தை கொடுத்ததே நாட்டு மக்கள் தான் என்றும் அதனை எந்த அரசும் பறிக்க கூடாது என்று தெரிவித்த ப.சிதம்பரம், அரசுக்கு எதிராக போராடிய நூற்றுக்கணக்கானோர் மீது தேசத்துரோக குற்றம் சாட்டி அரசு வழக்குப்பதிவு செய்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தேசிய கொடியை ஏற்றும் இந்நாளில் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தையும் அதிகரிக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் கடந்த 6 மாதங்களாக 3 முன்னாள் முதலமைச்சர்கள் விசாரணை இன்றி வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் ப.சிதம்பரம் கூறினார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ம் தேதி நீக்கியது.
ஜம்மு, லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தகவல் தொடர்பு துண்டிக்கப்ட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களான ப்ரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முக்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கபட்பட்டுள்ளளனர். தற்போது அங்கு பல முன்னேற்ற ஏற்பாடுகள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இணைய சேவை படிப்படியாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.