கரூர்: கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு செய்தார். போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கலெக்டர் அன்பழகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கரூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. 150 மாணவ மாணவியர்கள் முதலாமாண்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். 115 கோடி மதிப்பில் 800 படுக்கை வசதிகளுடன் மருத்துவமனை கட்டிடம் தமிழக முதல்வரால் திறக்கப்பட இருக்கிறது. புதிய கருவிகள், கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்படும்.