பேஸ்புக்கில் பெண் குரலில் பேசி நகை, பணம் பறிப்பு: போலீசாருக்கு பயந்து ஓடியபோது விபத்தில் சிக்கி 2 வாலிபர்கள் பலி: மாணவன் உள்பட இருவர் கைது

திருவொற்றியூர்: சென்னை கொளத்தூர் சன்தானியா நகர் 2வது தெருவை சேர்ந்தவர் தருண் (17). சென்னை அடுத்த காட்டுப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது நண்பர் கொளத்தூர் பூம்புகார் நகர் 21வது தெருவை சேர்ந்த ஆதி (23).  காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் (18), கொளத்தூர் வெற்றி நகரை சேர்ந்தவர்கள் யுவராஜ் (19), சதீஷ் (18). இவர்கள் 5 பேரும் நண்பர்கள்.

இதில், ஆதியின் தாய் மாலதி அயனாவரத்தில் உள்ள தெற்கு ரயில்வே அலுவலகத்தில் அதிகாரியாக உள்ளார்.  இந்நிலையில், தருண் பேஸ்புக்கில் ஒரு பெண் புகைப்படத்துடன் போலி கணக்கு தொடங்கி, பலரிடம் சாட்டிங் செய்துள்ளார். அப்போது, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா புஞ்சை புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சண்முகசுந்தரம் (37) என்பவர், பெண் என கருதி  பேஸ்புக்கில் தருணுடன் சாட்டிங் செய்துள்ளார்.

அதன் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவரும் தங்களது செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டனர். தருண் பெண் குரலில் பேசி மயக்கும் ஆற்றல் கொண்டவர். அதனால் சண்முகசுந்தரத்திடம் பெண் குரலில் பேசி, காதலிப்பதாக கூறியுள்ளார். இதில் மயங்கிய சண்முகசுந்தரம், உன்னை நேரில் சந்தித்து பேச வேண்டும் என, தருணிடம் கூறியுள்ளார். அதன்படி, அவரை சென்னைக்கு வரும்படி தருண் அழைத்துள்ளார். இதை நம்பிய சண்முகசுந்தரம் நேற்று முன்தினம் இரவு ஈரோட்டில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார். சென்னைக்கு வந்து தருணுக்கு போன் செய்துள்ளார்.  அப்போது, அவரை மாதவரம் ரவுண்டானா அருகே வரும்படி தருண் கூறியுள்ளார். அதன்படி, ரவுண்டானா அருகே வந்தபோது, தருண் தனது  நண்பர்களுடன்  அங்கு நின்றிருந்தார்.

சண்முகசுந்தரம் தருணை பார்த்து, தன்னுடன் பேசிய பெண் எங்கே என்று கேட்டுள்ளார்.

அப்போது, திடீரென தருண் மற்றும் அவரது  நண்பர்கள் ஆதி, நவீன்குமார், யுவராஜ், சதீஷ் ஆகியோர்  சண்முகசுந்தரத்தை தாக்கி, அவர் வைத்திருந்த செல்போன், ₹5 ஆயிரம், செயின், மோதிரம் மற்றும் ஏடிஎம் கார்டை பறித்தனர். பின்னர், தருணும், நவீன்குமாரும் சண்முகசுந்தரத்தை பிடித்துக்கொள்ள, அவரது  ஏடிஎம் ரகசிய எண்ணை பெற்றுக் கொண்ட   யுவராஜ், சதீஷ், ஆதி ஆகிய 3 பேரும் ரவுண்டானா அருகில்  உள்ள ஏடிஎம்மில் பணம் எடுக்க பைக்கில் சென்றனர்.  அப்போது அந்த வழியாக வந்த ரோந்து போலீசார், ஒரு வாலிபரை 2 பேர் பிடித்து வைத்திருப்பதை பார்த்து அருகில் வந்து, சண்முகசுந்தரத்திடம் விசாரித்தனர். அப்போது, அவர் நடந்த சம்பவத்தை போலீசாரிடம் தெரிவித்தார். அந்த நேரத்தில், ஏடிஎம் சென்ற 3 பேரும் அங்கு திரும்பி வந்தனர். இவர்கள், போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து பைக்கில் தப்பினர். இதையடுத்து சண்முகசுந்தரம், தருண், நவீன்குமார் ஆகிய 3 பேரை மாதவரம் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.

போலீசாரிடம் சிக்காமல் தப்பிய யுவராஜ், சதீஷ், ஆதி ஆகிய 3 பேரும் இரவு முழுவதும் பைக்கில் பல்வேறு பகுதிகளில் சுற்றியுள்ளனர். இவர்கள், நேற்று அதிகாலை கிழக்கு கடற்கரை சாலையில் பனையூர் சென்றபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில், யுவராஜ், சதீஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஆதிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆனாலும், அவர் அங்கிருந்து தப்பிவிட்டார். இதுகுறித்து மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தருண், நவீன்குமார் ஆகிய 2 பேரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறார். தப்பியோடிய ஆதியை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: