மதுபாட்டில் மறைத்து வைத்த தகராறில் அக்காவை கத்தியால் குத்தி கொன்ற தம்பி

 * தடுத்த 2 பேருக்கு கத்திக்குத்து

„ * வளசரவாக்கத்தில் பயங்கரம்

பூந்தமல்லி: மதுபாட்டில் மறைத்து வைத்த தகராறில் தனது சொந்த அக்காவையே கத்தியால் குத்தி கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் வளசரவாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. வளசரவாக்கம், வேலன் நகர், 4வது தெருவை சேர்ந்தவர் தாரகேஸ்வரி (55). இவர், இலங்கையை சேர்ந்தவர். இவரது தம்பி குகதாசன் (49), இலங்கையில் வசித்து வருகிறார். சமீபத்தில், சபரிமலைக்கு மாலை அணிந்து கோயிலுக்கு சென்று வந்த குகதாசன், சில நாட்களாக அக்காவின் வீட்டில் தங்கியிருந்தார். மது அருந்தும் பழக்கம் உள்ள குகநாதன், நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் கடையில் இருந்து 2 குவாட்டர் பாட்டில்களை வாங்கிவந்து, ஒன்றை குடித்துவிட்டு, மற்றொரு பாட்டிலை வீட்டில் மறைத்து வைத்துள்ளார். சிறிது நேரத்தில் போதை இறங்கியதும் மற்றொரு பாட்டிலை தேடியபோது கிடைக்கவில்லை.

 இதுபற்றி அக்காவிடம் கேட்டபோது, தனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குகதாசன், அக்காவிடம் கடும் வாக்குவாதம் செய்துள்ளார். தகராறு முற்றியதால் வேகமாக சமையல் அறைக்கு சென்ற குகதாசன், அங்கிருந்து கத்தியை எடுத்து வந்து தாரகேஸ்வரியை சரமாரி குத்தினார்.  இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை தடுக்க முயன்ற தாரகேஸ்வரியின் மகன் ஆதிசன் மற்றும் பாட்டி ேவதநாயகி (80) ஆகியோரையும் கத்தியால் குத்தினார்.

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த இருவரையும் மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.  தாரகேஸ்வரியின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, குகதாசனை கைது செய்தனர்.  இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: