சென்னை: ஊரப்பாக்கம், வள்ளியம்மை தெருவை சேர்ந்தவர் பூபதி (45). இவரது மனைவி புஷ்பா (38). தம்பதிக்கு டிங்கு நிஜந்தன் என்ற மகன், பூஜா என்ற மகள் உள்ளனர். சென்னை, குடிநீர் வாரியத்தில் பூபதி ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் ஊரப்பாக்கம்-ஆதனூர் சாலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் எதிரில் பூபதி நின்று பைக்கை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் திடீரென பூபதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பூபதிக்கும், அவர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் பூபதியை சுற்றிவளைத்து பிடித்து மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்துள்ளனர். இதில் பூபதி ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பூபதியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்குப்பதிவு செய்து முன்விரோதத்தில் பூபதி கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணமா? என விசாரித்து வருகின்றனர். மேலும் வண்டலூர் டிஎஸ்பி ரவிச்சந்திரன், கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலையாளிகள் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று ஆய்வு செய்து வருகின்றனர்.