×

மாணவர் சேர்க்கை சரிவு எதிரொலி: அரசு பள்ளிகளில் காணாமல்போன 1706 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்: பொது தொகுப்பிற்கு சரண் செய்யப்பட்டது

நாகர்கோவில்: தமிழகத்தில் அரசு பள்ளிகளில்  ஆசிரியரின்றி உபரியாக வருகின்ற மொத்தம் 1706 பணியிடங்கள் சரண்டர் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் 1.8.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியாளர் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டது. இதில் பாடவாரியாக ஆசிரியர்களின்றி உபரி என கண்டறியப்பட்ட பணியிடங்கள் இயக்குநரின் பொது தொகுப்பிற்கு ஒப்படைக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தமிழக பள்ளி கல்வி இயக்குநரால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.அதன் அடிப்படையில்தமிழகத்தில் மொத்தம் 1706 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் சரண்டர் செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 170 ஆசிரியர் பணியிடங்கள் சரண்டர் செய்யப்பட்டுள்ளன. மேலும் வேலூர் 120, காஞ்சிபுரம் 113, திருச்சி 107, திருவண்ணாமலை 106 பணியிடங்கள் சரண் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் ஆசிரியரின்றி உள்ள உபரி பணியிடங்களை வரும் காலங்களில் காலி பணியிடங்களாகவோ, அனுமதிக்கப்பட்ட பணியிடங்களாகவோ கருதக்கூடாது என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தமிழக பள்ளி கல்வி இயக்குநர் அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடர்பான பட்டியல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  இந்த 1706 பணியிடங்களும் இனி ஆசிரியர்களை நியமிக்க முடியாமல் காணாமல் போகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.  இது தொடர்பாக ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘அரசு பள்ளிகளில் புதியதாக இனி பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் நடைபெறுமா? என்பது கேள்விக்குறியான ஒன்றாகும். தற்போது அதிகார பூர்வமாக சரண் செய்யப்பட்டுள்ள 1706 பணியிடங்கள் தவிர கல்வித்துறையின் கணக்கீட்டின்படி மேலும் பல்லாயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்கள் உட்பட பல பிரிவு ஆசிரியர்கள் உபரி பட்டியலில் இருந்து வருகின்றனர்’ என்றார்.

அறிவியல் அதிகம்
சரண் செய்யப்பட்ட பணியிடங்களில் தமிழகத்தில் கணக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 32 மாவட்டங்களில் தமிழ் 308, ஆங்கிலம் 144, கணிதம் 289, அறிவியல் 457, சமூக அறிவியல் 371, இதர பாடங்கள் 30, எஸ்ஜிடி 107 இடங்களும் என்று 1706 பணியிடங்கள் சரண்டர் செய்யப்பட்டுள்ளன.


Tags : Teachers ,Government Schools ,Surrendered to Public Collections , Student Admissions, Government Schools
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்