தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் நடந்த போலீசாரின் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஒருநபர் ஆணையத்தின் 18வது கட்ட விசாரணை கடந்த 22ம் தேதி தொடங்கி நேற்று முடிந்தது. விசாரணைக்கு பிறகு ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் கூறுகையில், 18ம் கட்ட விசாரணை முடிந்துள்ளது. இதில் 704 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு 445 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 630 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டு உள்ளன. அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி மாதம் மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடப்பதற்கு முந்தைய ஒரு வார காலத்தில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை கேட்டுள்ளோம்.