கொடைரோடு அருகே கார்கள் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் சாவு: 3 பேர் படுகாயம்

வத்தலக்குண்டு:  கொடைரோடு அருகே கார்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் பலியாகினர். 3 பேர் படுகாயமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் வெள்ளையப்பன் (58). இவர் நேற்று தனது குடும்பத்துடன் உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக, திருநெல்வேலிக்கு காரில் புறப்பட்டார். மதுரை - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில்,  கொடைரோடு அருகே சடையாண்டிபுரம் பிரிவில் மாலை 3.30 மணி அளவில் சென்றது. அப்போது மதுரையில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி சென்ற கார், சாலையின் குறுக்கே சைக்கிளில் கடக்க முயன்ற அப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (60)  என்பவர் மீது மோதி  தடுப்பை உடைத்துக் கொண்டு, எதிரே வந்த வெள்ளையப்பன் கார் மீது மோதியது.

 இதில் 2 கார்களின் முன்பகுதியும் நொறுங்கியது. வெள்ளையப்பன், ஜெயக்கனி (70), கார் ஓட்டி வந்த செல்வமைந்தன் (45) மற்றும் மதுரை  காரில் வந்த பெரியம்மாள் (70) ஆகிய 4 பேர் அதே இடத்தில் பலியாயினர். சாலையை கடக்க முயன்று படுகாயமடைந்த கிருஷ்ணன், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்து  திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து அம்மையநாயக்கனூர்  போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  விபத்திற்குள்ளான கார்களை அப்புறப்படுத்த வந்த மீட்பு வாகனத்தில் இருந்து இரும்பு சங்கிலி விழுந்து, மீட்பு பணியில் ஈடுபட்ட நெடுஞ்சாலை ரோந்து காவலர் பெருமாள் படுகாயமடைந்தார்.

Related Stories: