திருக்கோவிலூர் அருகே அரசு பஸ் டயரில் கால் சிக்கி பள்ளி மாணவன் படுகாயம்: மாணவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதி

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே அரசு பஸ் டயரில் சிக்கி பள்ளி மாணவன் படுகாயம் அடைந்தார். அவரை சக மாணவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். திருக்கோவிலூர் அருகே கீழக்கொண்டூர் கிராமத்தை  சேர்ந்தவர் செந்தில் மகன் பிரதாப்குமார். இவரது தாய், தந்தை  இருவரும் மும்பையில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். பிரதாப்குமார்  உறவினர் வீட்டில் தங்கி புத்தூர் அரசு  ேமல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல்  பள்ளி முடிந்து புத்தூர் பகுதியில் இருந்து கீழக்கொண்டூர் செல்ல பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக வந்த அரசு டவுன்  பஸ்சில் ஏற முற்பட்டபோது, பஸ் சக்கரத்தில் சிக்கி காலில் பலத்த காயம் ஏற்பட்டது.  இதையடுத்து அதே பள்ளியில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவர்கள் அரவிந்த்,  முரளி ஆகிய 2 பேரும் மாணவரை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து  அரகண்டநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: