மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

மேல்மலையனூர்: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் மாதந்ேதாறும் அமாவாசை தினத்தன்று நள்ளிரவில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். இதில் கலந்துக்கொள்ள தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று தை அமாவாசையை முன்னிட்டு மூலவர் அங்காளம்மனுக்கு அதிகாலையிலேயே பன்னீர்,  சந்தனம், பஞ்சாமிரதம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

உற்சவர் அங்காளம்மன் காமாட்சி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் நள்ளிரவு 11.30 மணியளவில் வடக்கு வாயில் வழியாக ஊஞ்சல் மேடைக்கு வந்த அங்காளம்மனுக்கு பூசாரிகள் தாலாட்டு பாடல்கள் பாடினர். அப்போது, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் தீபம் ஏந்தி மனமுருகி வழிப்பட்டனர். தை மாத ஊஞ்சல் உற்சவத்தில் ஊஞ்சல் மேடை முழுவதும் திராட்சை பழம் மற்றும் பல்வேறு பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஊஞ்சல் உற்சவ ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ராமு, மேலாளர் மணி, மேற்பார்வையாளர் செண்பகம், சதிஷ், சண்முகம் மற்றும் அறங்காவலர்கள் செல்வம்,

ஏழுமலை, ரமேஷ், கணேசன், சரவணன், மணி, உப்புசட்டி ஆகியோர் செய்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு துறை மற்றும் மருத்துவ முதலுதவி குழவினர் தயார் நிலையில் இருந்தனர்.

Related Stories: