மேலூர், பெரியாற்று நீரினை மட்டுமே நம்பி உள்ள கடைமடை பகுதியான மேலூர் பகுதியில் அதிகளவு நெற்பயிர்கள் மட்டுமே பயிரிடப்பட்டு வந்த நிலையில் மாற்று பயிராக மலை பிரதேசத்தில் விளையும் பயிரை விளைவித்து சருகுவலையபட்டி விவசாயிகள் அசத்தியுள்ளனர். ஒரு போக ஆயக்கட்டு பகுதியான மேலூர் பகுதியில் ஆண்டுக்கு ஒருமுறை அணையில் இருந்து தண்ணீர் திறக்கும்போது மட்டும் நெல் பயிரிடப்பட்டு வந்தது. இதிலும் மேலூரின் கடைமடையில் உள்ள பல கிராமங்களுக்கு கால்வாய் நீர் முறையாக சென்றடையாமல் அந்த நெல் பயிர்களும் பாதியிலேயே கருகிவிடும் அபாயமும் இருந்தது. இதனால் கால்வாய் நீரை மட்டும் நம்பி இருக்காமல், கிணற்று நீரினை கொண்டு கரும்பு, வாழை போன்ற விவசாயத்தை சிலர் செய்து வந்தனர். அதிலும் கரும்பை தற்போது ஆலைகள் கொள்முதல் செய்வதில்லை என்பதால், அதை பயிர் செய்வதற்கும் விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.