சென்னை: தனியார் கல்வி குழுமத்திற்கு சொந்தமான பள்ளி, கல்லூரி என தமிழகம் முழுவதிலும் 64 இடங்களில் கடந்த 4 நாட்களாக வருவமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.532 கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள் மற்றும் ரூ. 2 கோடி ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தனியார் கல்வி குழுமத்திற்கு சொந்தமாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் தமிழகம் முழுவதிலும் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்திற்கு சொந்தமான 64 இடங்களில் ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 21ம் தேதி தொடங்கி கடந்த 4 நாட்களாக சோதனை நடத்தினர்.
இதில், சென்னை முகப்பேர், திருவள்ளூர் மாவட்டம் சூரப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள், மதுரையில் உள்ள போதி கேம்பஸ், பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இருந்து கணக்கில் வராத சுமார் ரூ. 532 கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத ரூ. 2 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து வருமானத் வரித்துறை அதிகாரிகள் கல்வி குழும உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.