மகளை கடத்தி கொன்று விடுவேன் என 10 லட்சம் கேட்டு தொழிலதிபருக்கு மிரட்டல்: உறவினர் கைது

பெரம்பூர்: சென்னை ஓட்டேரி மங்களபுரம் கிருஷ்ணதாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் அஜ்மல் (35). சென்னை அண்ணா சாலையில் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளன.

கடந்த 3 நாட்களுக்கு முன், அஜ்மல் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ‘‘எனக்கு ₹10 லட்சம் பணத்தை நாளைக்கும் தரவில்லை எனில், உனது 10 வயது  மகள் மிஸ்பாவை  கடத்தி, கொன்று விடுவேன்,’’ என மிரட்டல் விடுத்துள்ளார்.

பயந்து போன அஜ்மல் உடனடியாக தனது மகளை தொடர்புகொண்டு அவர் பாதுகாப்பாக இருப்பதை உறுதிபடுத்திக் கொண்டு,  இதுகுறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.  புகாரின்பேரில் ஓட்டேரி இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்கு பதிந்து, மிரட்டல் விடுக்கப்பட்ட செல்போன் எண்ணை வைத்து, அந்த நபர் யார் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தார்.  இந்நிலையில் மிரட்டல் விடுத்தவரின்  செல்போன் சிக்னல்களை கண்காணித்து வந்தனர்.

அந்த செல்போன் சிக்னல் புளியந்தோப்பு, பேசின்பிரிட்ஜ் உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி வந்து போனதை அறிந்தனர். நேற்று மதியம் ஒரு மணி அளவில் பேசின் பிரிட்ஜ் பகுதியில் அந்த செல்போன் எண் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்ட ஓட்டேரி இன்ஸ்பெக்டர் வள்ளி மற்றும் ஓட்டேரி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலக்ஷ்மி எஸ்ஐ  ஷஜிபா  உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு சென்று அந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.   அதில், புளியந்தோப்பு டிகாஸ்டர் ரோடு பகுதியை சேர்ந்த சிக்கந்தர் ஷரீப் (32) என்பதும், புகார்  கொடுத்த அஜ்மல் என்பவரின் மனைவி வழி உறவினர் என்பதும் தெரிய வந்தது. மேலும், அஜ்மலிடம் பணம் நிறைய உள்ளதாகவும், தனக்கு கடன் சுமை அதிகமானதால் அஜ்மலிடம்  பணம் கேட்டதாகவும் அவர் தர மறுக்கவே, அவரிடம் பணம் பறிப்பதற்காக அவரது மகளை கடத்தி 10 லட்சம் பறிக்க திட்டம் தீட்டியதாகவும் கூறினார்.

ஆனால் மறுநாள் அவரது மகளை கடத்துவதற்க்கு  முனபே  அஜ்மல்  போலீசில் புகார் கொடுத்ததால் மகளை கடத்தாமல் பின் வாங்கியதாகவும் தெரிவித்தார்.  இந்த கடத்தல் சதிக்கு உடந்தையாக இருந்த புளியந்தோப்பு கே.எம் கார்டன் பகுதியை  சேர்ந்த அப்பு  என்கின்ற தீபக் (24 ) என்பவரையும்  போலீசார் கைது செய்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

சிக்கியது எப்படி?   

அஜ்மலுக்கு மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, அந்த எண் 2 நாட்களுக்கு முன்பு புதிதாக வாங்கப்பட்டது என்பதும், அதிலிருந்து அஜ்மலிடம் மட்டுமே பேசப்பட்டு இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து புளியந்தோப்பு மற்றும் ஓட்டேரியில் உள்ள செல்போன் ரீசார்ஜ் கடைகளுக்கு சென்று குறிப்பிட்ட அந்த எண், எந்த கடையில் இருந்து வாங்கப்பட்டது என போலீசார் விசாரித்தனர். அதில் ஒரு கடையில் அந்த எண்ணுக்கு ரீசார்ஜ் செய்யப்பட்டது தெரியவந்தது. அந்த கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் அந்த நபர் வந்து போவது தெரிந்தது. அவரின் புகைப்படத்தை  புகார் கொடுத்த அஜ்மலிடம் காண்பித்த போது இது எனது மனைவி வழி உறவினர் என அடையாளம் காட்டினார். இதனையடுத்து அவரை பேசின்  பிரிட்ஜில் வைத்து போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: