பெரம்பூர்: ஓட்டேரி அருகே குடோனில் பதுக்கிய ₹5 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, குடோன் உரிமையாளர் உள்பட 2 பேரை கைது செய்தனர். சென்னை தலைமை செயலக காவலர் குடியிருப்பு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தலைமை செயலக காவலர் குடியிருப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, எஸ்ஐ மீனா மற்றும் போலீசார் ஓட்டேரி, அயனாவரம் பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, ஓட்டேரி பிரிக்ளிங் ரோடு பகுதியில் உள்ள குடோனில் குட்கா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக குடோன் உரிமையாளர் எஸ்.எஸ்.புரம் ஏ-பிளாக் பகுதியை சேர்ந்த கணேசன் (53), படப்பை வரதராஜபுரத்தை சேர்ந்த வரதராஜ் (42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 5 லட்சம் மதிப்பிலான 500 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.இவர்கள், ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் குட்கா கடத்தி வந்து, அதனை பிரித்து வடசென்னையில் உள்ள கடைகளுக்கு விற்றது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.