திருவனந்தபுரம்: கேரளாவில் வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதத்துடன் நிறைவடையும். டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடும் குளிர் நிலவும். இதனால், வெப்பநிலை குறைந்தபட்சம் 20 டிகிரி செல்சியஸ் வரை செல்லும். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக குளிர் மிகவும் குறைந்து காணப்படுகிறது. பகல் நேரங்களில் வெயில் கோடை காலத்தை போல சுட்டெரிக்கிறது. கேரளாவில் பெரும்பாலான மாவட்டங்களில் சராசரியை விட 3.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து உள்ளது. இரவில் வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கோட்டயத்தில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொளுத்தியது. இது சராசரியை விட 3.9 டிகிரி செல்சியஸ் கூடுதலாகும். கண்ணூரில் 3.6 டிகிரியும், ஆலப்புழாவில் 3.3 டிகிரியும், கோழிக்கோட்டில் 3.2 டிகிரியும் வெப்பம் உயர்ந்துள்ளது.