புதுடெல்லி: ‘குற்றப் பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் சீட் வழங்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்,’ என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறியது. உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கி அரசியல் சாசன அமர்வு கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், ‘தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும், குற்றங்களில் ஈடுபட்டிருந்தால் அது பற்றி தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும், மேலும், பத்திரிக்கை மற்றும் டிவி.யில் அது குறித்து விளம்பரம் செய்ய வேண்டும்,’ என உத்தரவிட்டது. ஆனாலும், அரசியலில் குற்றவாளிகள் போட்டியிடுவதை தடுக்க முடியவில்லை என பாஜ.வை சேர்ந்த வக்கீல் அஸ்வினி உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.