பெரியார் சிலை உடைப்பு விவகாரம் ராமதாஸ், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்

சென்னை: பெரியார் சிலை உடைப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ராமதாஸ் (பாமக நிறுவனர்): காஞ்சிபுரம் மாவட்டம் களியப்பேட்டையில் பெரியார் சிலையை சில விஷமிகள் சேதப்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்குடன் செய்யப்பட்டுள்ள இந்த வெறுப்புச் செயல் கண்டிக்கத்தக்கது. அண்மைகாலமாகவே பெரியார், திருவள்ளுவர் உள்ளிட்டோரின் சிலைகளை சேதப்படுத்தும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இது ஒரு சாராரின் வக்கிர உணர்வையே வெளிப்படுத்துகிறது. பெரியாரின் கொள்கைகளில் மாற்றுக்கருத்து இருந்தால், அதை கொள்கைகள் மூலமாகத்தான் எதிர்கொள்ள வேண்டும். மாறாக, பெரியாரின் சிலைகளை சேதப்படுத்துவது, அவமதிப்பது போன்ற செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

வைகோ (மதிமுக பொது செயலாளர்): களியப்பேட்டையில் பெரியார் சிலையை சமூக விரோதிகள் சிலர் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். நள்ளிரவில் திருட்டுத்தனமாக செய்யப்பட்டுள்ள இந்த அக்கிரமச்செயலை மதிமுக வன்மையாகக் கண்டிக்கிறது. பெரியார் சிலைகள் சேதப்படுத்தப்படுவது என்பது இந்த ஆட்சியில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை தண்டிப்பதில் மெத்தனம் காட்டியே வருகிறது. ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): பெரியார் சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகளை காவல்துறை உடனடியாக கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

அனைத்து அரசியல் கட்சிகளின், மறைந்த தலைவர்களுக்கு புகழ் சேர்க்க வேண்டுமே தவிர அவர்களுக்கு அவமரியாதை செய்யும் செயல்கள் நடப்பதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டிடிவி.தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்) டிவிட்டர் பதிவு: உத்திரமேரூர் அருகே களியப்பேட்டை பகுதியில் பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இத்தகைய செயலை யார் செய்திருந்தாலும் அவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமீப காலமாக அரங்கேறி வரும் இத்தகைய நிகழ்வுகளை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிடக்கூடாது.

திருமாவளவன் (விசிக): தமிழகத்தில் சனாதன சக்திகளான ஆர்எஸ்எஸ், பாஜ உள்ளிட்ட சங்பரிவார்கள்  பெரியாரை கொச்சைப்படுத்தும் வகையிலும், அவருடைய கருத்தியலுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் ஆதாயம் தேடுவதற்கென சனாதன சக்திகள் அண்மைக்காலமாக இத்தகைய வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருவது கண்டனத்துக்குரியது. ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி தலைவர்): பெரியாரின் சிலையை நாசப்படுத்தியவர்கள் சமூகநீதிக்கு எதிரான சிந்தனை உடையவர்கள். அவர்களால் மட்டுமே இதுபோன்ற அராஜக செயல்களில் ஈடுபட முடியும். கயவர்களை உடனே கண்டுபிடித்து அவர்களுக்கு சட்டரீதியான கடும் தண்டனை வழங்க வேண்டும்.

Related Stories: