×

நதிநீர் பிரச்சனை குறித்து விவாதிக்க முதல்வர் பழனிசாமியுடன் விரைவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்திப்பு : அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் உறுதி

சென்னை : தமிழகம் - கேரளா இடையே நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து விவாதிக்க கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் விரைவில் முதல்வர் பழனிசாமியை சந்திக்க இருப்பதாக அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். கேரள மாநில சுற்றுலாத் துறை அமைச்சர்  கடக்கம்பள்ளி சுரேந்திரன், சென்னையில் தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில்  தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

இரு மாநில சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது கன்னியாகுமரியில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விருந்தினர் மாளிகை கட்டுவதற்கு கேரளா வைத்த கோரிக்கையை பரிசீலிப்பதாக அமைச்சர்கள் உறுதி தெரிவித்தனர். கீழடி அகழாய்வு மற்றும் கேரள மாநிலத்தில் நடைபெறும் முசிலீப்பட்டினம் அகழாய்வு ஆகியவை குறித்து இரு மாநில அரசுகளும் கலந்து ஆலோசித்து செயல்படுவது பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இரு மாநில எல்லையில் உள்ள கண்ணகி கோயிலுக்கு பாதை அமைக்க இரு தரப்பு அதிகாரிகளும் ஆலோசனை நடத்திடவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் கேரளா மாநில கலாச்சாரத்தை மேம்படுத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதித்ததாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். இரு மாநிலங்கள் இடையே உள்ள பிரச்சனைகள் அனைத்தும் வரும் காலங்களில் பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்த்துக் கொள்வது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.


Tags : Pinarayi Vijayan ,CM Palanisamy ,Kerala ,Karuppannan , Tamilnadu, Kerala, Pinarayi Vijayan, CM, Palanisamy, KC Karuppannan
× RELATED கேரளாவை பிரதமர் மோடி...