பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது பிரெக்சிட் மசோதா: வரும் 31-ல் ஐரோப்பிய யூனியனிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறது பிரிட்டன்

லண்டன்: 28 நாடுகள் இடம்பெற்றுள்ள ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதாக, பிரிட்டன் அறிவித்தது. இது தொடர்பாக, 2016ல், மக்களிடம் கருத்து கேட்டு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்ததை அடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் துவங்கின. இதற்காக கொண்டு வரப்பட்ட பிரெக்சிட் ஒப்பந்தத்தை எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சி எம்பி.க்களின் எதிர்ப்பால், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் போனது. இதனால், அப்போதைய பிரதமர் தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அடுத்ததாக பிரதமரான போரிஸ் ஜான்சனாலும், இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியவில்லை. இதனால், தனக்கு பெரும்பான்மை கிடைக்க வேண்டும் என்பதற்காக,  நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு மீண்டும் பொதுத்தேர்தலை சந்தித்தார். இந்த ஒப்பந்தத்தை முன்வைத்தே அவர் பிரசாரமும் செய்தார். அதில், அவருடைய பழமைவாத கட்சி (கன்சர்வேடிவ்) அதிக பெரும்பான்மையுடன் கடந்த மாதம் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்தது. இதையடுத்து, பிரெக்சிட் ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் முயற்சியால், பிரெக்சிட் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார். அதனையடுத்து வரும் ஜன.,31ம் தேதி, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறது. இதைக் கொண்டாடும் வகையில், பிரிட்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Related Stories: