புதுடெல்லி: டெல்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள அமர்ஜவான் ஜோதியில் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் முப்படைகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவது வழக்கம். இந்த நிலையில், இப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தேசிய போர் நினைவிடத்தில் இந்த ஆண்டு முதல் முறையாக பிரதமர் மோடி அஞ்சலி செலுத்த உள்ளார். இது தொடர்பாக ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: ஜனவரி 26ம் தேதி குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் முன்பாக, பிரதமர் மோடி புதிய தேசிய போர் நினைவிடத்தில் மாலை அணிவித்து அவர் அஞ்சலி செலுத்துகிறார். அப்போது அவருடன் முப்படை தலைமை தளபதியாக பொறுப்பேற்றுள்ள பிபின் ராவத் மற்றும் ராணுவம், கடற்படை, விமானப்படை தளபதிகளும் உடன் இருப்பார்கள். இது தவிர முதல்முறையாக முப்படை தளபதி பிபின் ராவத்தும் குடியரசு தின கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார்.