பெங்களூரு: கர்நாடகாவில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மூடநம்பிக்கை தடுப்பு சட்டத்திற்கு கர்நாடக ஆளுநர் வி.ஆர்.வாலா ஒப்புதல் அளித்துள்ளார். மனிதர்களிடம் காலம் காலமாக புரையோடி இருக்கும் மூடநம்பிக்கையை பயன்படுத்தி சிலர் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு பணம் பறிக்கும் சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளது. புதையலுக்காக நரபலி கொடுப்பது, எதிரிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் பில்லி, சூனியம் கட்டுகள் போடுவதாக ஏமாற்றுவது ஆகியவற்றை தடுக்க, கர்நாடகாவில் சித்தராமையா முதல்வராக இருந்தபோது மூடநம்பிக்கை எதிர்ப்பு சட்ட மசோதாவை மேலவை, பேரவையில் தாக்கல் செய்து ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தார். இந்நிலையில், மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து பாஜ ஆட்சி அமைந்துள்ள சமயத்தில் இச்சட்டத்துக்கு ஆளுநர் வி.ஆர்.வாலா ஒப்புதல் வழங்கியுள்ளார். ஜனவரி 4ம் தேதி முதல் சட்டம் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.