என்னை பற்றி தவறான கருத்துக்களால் டிவி, பேப்பரையே பார்க்கிறது இல்லை: பாக். பிரதமர் இம்ரான்கான் ஆவேசம்

டாவோஸ்: சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார கூட்டமைப்பின் 2020ம் ஆண்டு உச்சி மாநாடு, கடந்த 21ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது. இதற்காக டாவோஸ் வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், உலக முதலீட்டாளர்கள், வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது: நமது மூதாதையர்கள் கனவு கண்டது போல், மனிதாபிமானமும், வளமும் மிக்க பாகிஸ்தானை உருவாக்க அரசு நிர்வாகத்தில் சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை நிறைவேற்ற போராட்டங்களையும், சிறிய வலிகளையும் தாங்கி கொள்ளத்தான் வேண்டும்.

பலர் இறக்க விருப்பம் இல்லாமல் நேரடியாக சொர்க்கத்துக்கு போக வேண்டும் என கூறுகின்றனர். இதுவொரு மோசமான முன் உதாரணமாக இருக்கலாம். இன்னும் சொல்லப் போனால், வலியின்றி அறுவை சிகிச்சையின் மூலம் கட்டி  அகற்றப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர். இது எப்படி சாத்தியமாகும்?. பொறுமையாக இருங்கள். பாகிஸ்தானுக்கு வளமான எதிர்காலம் உள்ளது. எனது 40 வருட பொதுவாழ்வில் விமர்சனங்கள் பழகிப் போய் விட்டது. ஆனால், பிரதமராக பதவியேற்ற பின், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஊடகங்கள் என்னை பற்றி தவறான, அவதூறு கருத்துக்களை பரப்பி வருகின்றன. இதனை தவிர்க்க, காலையில் நாளிதழ்களை படிப்பதையும், மாலையில் டிவி.யில் விவாத நிகழ்ச்சிகளை பார்ப்பதையும் நிறுத்தி விட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: