வடக்கு பச்சையாறு நீர்த்தேக்கத்தில் இருந்து சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

சென்னை: திருநெல்வேலி மாவட்டம் வடக்கு பச்சையாறு நீர்த்தேக்கத்தில் இருந்து சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கு பச்சையாறு நீர்த்தேக்கத்தில் இருந்து, பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அவர்களின் வேண்டுகோளினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்கு பச்சையாறு நீர்த்தேக்கத்தில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு 27.1.2020 முதல் 31.3.2020 வரை நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 100 கன அடிக்கு மிகாமல், நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தினை பொறுத்து, தேவைக்கேற்ப, தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன். இதனால் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம் பத்தை, களக்காடு, வடமலை சமுத்திரம் உள்ளிட்ட 14 கிராமங்களில் உள்ள 9592.91 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: