மதுரை: மதுரை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று மதுரையில் நடந்தது. கலெக்டர் வினய் தலைமை வகித்தார். முகாமை அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைத்து பேசியதாவது: தற்போது 50 சதவீதத்திற்கு மேல் பெண்கள் ஊராட்சி மன்ற தலைவராக, துணைத்தலைவராக அமர்ந்திருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர்தான். இவர்களை நீங்கள் வாழ்க்கையில் மறக்கக் கூடாது. இந்த நாட்டுக்கு சேவையாற்றியதில் கலைஞருக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு. அதை நான் மறுக்க மாட்டேன் என்றார். பிறகு நிருபர்களிடம் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறும்போது, ‘‘ரஜினி தனது மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்ததற்கு பெரியார் கொள்கை தான் காரணம் என்பதை அவர் மறக்கக் கூடாது. எப்பொழுதும் பொறுமையாக பேசும் ரஜினியை யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள்’’ என்றார்.