நைட்டி அணிந்தபடி பெண்களின் உள்ளாடைகள் திருடும் சைக்கோ: கோவையில் மீண்டும் பரபரப்பு

கோவை: கோவையில் நைட்டி அணிந்தபடி பெண்களின் உள்ளாடைகளை திருடும் சைக்கோ வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள். கோவை துடியலூர் அருகே மீனாட்சி கார்டன் குடியிருப்பு பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளின் முன்பு காய போடும் பெண்களின் உள்ளாடைகள் கடந்த சில மாதங்களாக காணாமல் போயின. வீட்டின் முன்பு கழற்றி விடப்பட்ட பெண்களின் செருப்புகளும் திருடப்பட்டன. குடியிருப்பு வாசிகள் வீடுகளின் முன்பு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது நைட்டி அணிந்த ஒரு வாலிபர், பெண்களின் உள்ளாடைகள், செருப்பு மற்றும் கார்களில் உள்ள பொருட்களை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இந்நிலையில் அதே பகுதியில், ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் திருடப்பட்ட பெண்களின் உள்ளாடைகள், செருப்புகள் எரிக்கப்பட்டிருந்தன. இவற்றை அந்த சைக்கோ வாலிபர் தீயிட்டு கொளுத்தியது தெரியவந்தது. தற்போது சமூக வலைதளத்தில், அந்த சைக்கோ வாலிபரின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. இதுகுறித்து மீனாட்சி கார்டன் குடியிருப்பு வாசிகள், துடியலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கவுண்டம்பாளையம் பகுதியில் இரவு நேரத்தில் பைக்கில் வரும் வாலிபர் ஒருவர் சுவர் ஏறி குதித்து ஜன்னலை திறந்து பார்ப்பது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாயின.

எனவே இந்த 2 சம்பவத்திலும் ஈடுபட்டவர் ஒரே நபராக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். சைக்கோ வாலிபரை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: