நெல்லை: நெல்லை கொக்கிரகுளம் புதிய பாலத்தில் இன்று வாகனங்கள் வெள்ளோட்டம் நடந்தது. நெல்லை மாநகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தின் அருகில் கூடுதலாக மற்றொரு பாலம் கட்டும் பணி நடந்து வந்தது. இதேபோல் அருகே உள்ள பலாப்பழம் ஓடை அருகிலும் மற்றொரு சிறிய பாலம் கட்டப்பட்டு வந்தது. மேலும் இதனை இணைக்கும் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
இந்நிலையில் இந்த இரு பாலங்கள் வழியாக வெள்ளோட்டமாக இன்று போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது.
முதலில் இருசக்கர மற்றும் 3 சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பகல் 12 மணிக்கு மேல் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. ஒருவழிப்பாதையாக பாளை மற்றும் கொக்கிரகுளத்தில் இருந்து சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் மட்டும் புதிய பாலத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டன. வாகனங்கள் சென்று இணைப்பு தளம் சீரான பின்னர் அதற்கு மேல் தார்த்தளம் விரிக்கப்பட்டு முறைப்படி பாலம் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்.