திருச்சி: திருச்சி மாவட்டத்தில் பட்டப்பகலில் ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒருவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறையூர் மின்னப்பன் கோவிலில் முதல் மரியாதை பெறுவது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த ஜிம் மணி தரப்பினருக்கும், புகழேந்தி தரப்பினருக்கும் இடையே சில காலங்களாக மோதல் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் ஜிம் மணி கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில், சிறையில் இருந்த புகழேந்தி கடந்த 13 ஆம் தேதி ஜாமீனில் வெளிவந்தார்.
காவல் நிலையத்திற்கு கையெழுத்திட சின்ன செட்டி தெரு வழியாக புகழேந்தி சென்ற போது, ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டினர். இதில், புகழேந்தி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, ஐந்து பேர் கும்பலை காவல்துறை தேடி வருகிறது. மேலும், ஜிம் மணி கொலைக்கு பழி வாங்க புகழேந்தி வெட்டிக் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறை விசாரித்து வருகிறது.