இந்தியாவின் எதிரிகள் சொத்து என்று வகைப்படுத்தப்பட்டுள்ள 9,400 கட்டிடங்கள் விற்க மத்திய அரசு முடிவு

புதுடெல்லி: இந்தியாவின் எதிரிகள் சொத்து என்று வகைப்படுத்தப்பட்டுள்ள 9,400 கட்டிடங்களை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டை விட்டு ஓடி சென்று பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளில் குடியுரிமை பெற்றவர்களின் கட்டிடம், நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துக்களும் எதிரிகள் சொத்து என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ள எதிரிகள் சொத்துக்களை மத்திய அரசு கைப்பற்றி விற்பனை செய்து அந்த தொகையை அரசு நிதியில் சேர்ப்பது வழக்கமாகும். அவ்வகையில் இந்தியாவின் எதிரிகள் சொத்து என்று வகைப்படுத்தப்பட்டுள்ள 9 ஆயிரத்து 400 கட்டிடங்கள் உள்ளிட்டவற்றை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் எதிரி சொத்துகள் விற்பனையை மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அமைச்சர்கள் குழு கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி உள்ளிட்ட அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளனர்.

உத்திரபிரதேசம், மேற்குவங்கம், டெல்லியில் உள்ள எதிரி சொத்துகள் விற்பனை செய்யப்படுவதன் மூலமாக சுமார் 1 லட்சம் கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து எதிரி சொத்துக்களில் 9 ஆயிரத்து 280 பாகிஸ்தானியராலும், 126 சொத்துக்கள் சீனர்களாலும் கைவிடப்பட்டவை ஆகும். எதிரி சொத்துகளில் 4 ஆயிரத்து 991 கட்டிடங்கள் உத்திரப்பிரதேசத்திலும், 2 ஆயிரத்து 725 கட்டிடங்கள் மேற்கு வங்கத்திலும், 487 சொத்துக்கள் டெல்லியிலும் உள்ளன. மேலும், சீனர்கள் சொத்தில் 57 மேகாலயாவிலும், 29 மேற்கு வங்கத்திலும், 7 அசாம் மாநிலத்திலும் உள்ளது. இவ்வகையிலான சொத்துக்களை விற்க தற்போது மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Related Stories: