சென்னை: குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னையில் இறுதி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டின் 71வது குடியரசு தினவிழா வருகின்ற 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதற்காக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சாலையில் 3 நாட்களாக நடைபெற்று வந்த ஒத்திகை நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெற்றது. தேசியக் கொடியை ஆளுநர் ஏற்றுவது போன்ற ஒத்திகையின் போது மரியாதை செலுத்தும் வகையில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் அணிவகுத்துச் சென்றன. இதனை தொடர்ந்து, காவல்துறை, கடலோர காவல்படை, விமானப்படை, குதிரைப்படை, உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காலையில் 7.30 மணியிலிருந்து 10 மணி வரை நடைபெற்ற ஒத்திகையின் போது முப்படையினரின் கண்கவர் அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.