நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் வடக்குப்பச்சையாறு நீர்த்தேக்கத்திலிருந்து, வரும் 27 ம் தேதி முதல் பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். வடக்கு பச்சையாறு நீர்த்தேக்கத்தின் பாசன பரப்பு ஆயக்கட்டான மடத்துக்கால், நான்குநேரியன் கால்வாய் மற்றும் பச்சையாற்றின் குறுக்கே அமைந்துள்ள முதல் ஐந்து அணைக்கட்டுகள் ஆகியவற்றின் மூலம் பாசனம் பெறும் 9592.91 ஏக்கர் நிலங்களுக்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 100 கன அடிக்கு மிகாமல் பிசான சாகுபடிக்கு நீர் இருப்பினை பொறுத்து தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாங்குநேரி வட்டம் பத்தை, களக்காடு, வடமலை சமுத்திரம் உள்ளிட்ட 14 கிராமங்களில் உள்ள 9 ஆயிரத்து 592 புள்ளி 91 ஏக்கர் நிலங்கள் பாசனத்துக்கு வரும் 27 ம் தேதி முதல், மார்ச் மாதம் 31 ம் தேதி வரை, நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 100 கன அடிக்கு மிகாமல், தண்ணீர் திறக்க உத்தரவிட்டு இருப்பதாகவும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். இந்த அணையின் மூலம் 110 குளங்களும், 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களும் பயன் அடைகின்றன.