சென்னை: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் குழந்தை வன்கொடுமைகள் 250% அதிகரித்துள்ளதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கொடுமைகள் குறித்து தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது. அந்த புள்ளி விவரத்தில் தமிழகத்தில் 2018-ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 4155 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது. 2017- ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது கடந்த வருடத்தை விட 18% அதிகமாகும்.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 250% அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவலை அளித்துள்ள புள்ளிவிவரம், அதில் 49% பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்கொடுமை தொடர்பானவை என குறிப்பிட்பட்டது. இந்திய அளவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகவுள்ள 5 மாநிலங்களில் தமிழகமும் இடம்பிடித்துள்ளது. புதிதான வழிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அரங்கேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்களை தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் பாலியல் சீண்டல் தொடர்பாக கிராமம், நகரம் என எல்லா இடங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்றும் குழந்தைகள் நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.