ஆமதாபாத்: ஆமதாபாத் - மும்பை இடையிலான தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில், ஒன்றரை மணி நேரம் தாமதமாக சென்றதால் பயணியர் அனைவருக்கும் தலா ரூ.100 இழப்பீடு வழங்கப்படும் என ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்துள்ளது. குஜராத்தின் ஆமதாபாத் - மஹாராஷ்டிராவின் மும்பை இடையிலான தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை ஐ.ஆர்.சி.டி.சி. எனப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் கடந்த 19ம் தேதி துவங்கியது. ஆமதாபாத் - மும்பை இடையேயான தேஜஸ் அதிவேக ரயில் போக்குவரத்து சேவையை குஜராத் முதல்வரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான விஜய் ரூபானி, ஆமதாபாதில் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆமதாபாத் - மும்பை இடையேயான துாரத்தை இந்த ரயில் ஆறு மணி நேரத்தில் கடக்கும்.