பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட 335 உள்ளாட்சி பதவிகளுக்கு 30ம்தேதி மறைமுக தேர்தல் : மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டத்தை தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடந்தது. இதில் பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்பட்டது. போதிய உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால் பல்வேறு இடங்களில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட 335 இடங்களில் வரும் 30ம் தேதி மறைமுக தேர்தலை நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஒரு மாவட்ட ஊராட்சி தலைவர், ஒரு மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், 26 ஊராட்சி ஒன்றிய தலைவர், 41 ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர், 266 கிராம ஊராட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட மொத்தம் 335 பதவிகளுக்கு வரும் 30ம் தேதி மறைமுக தேர்தல் நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு 30ம் தேதி காலை 10.30 மணிக்கும், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், கிராம ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பதவிகளுக்கு மாலை 3.30 மணிக்கும் தேர்தல் நடைபெறுகிறது. எனவே இதுதொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: