சென்னை: தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டத்தை தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடந்தது. இதில் பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்பட்டது. போதிய உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால் பல்வேறு இடங்களில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட 335 இடங்களில் வரும் 30ம் தேதி மறைமுக தேர்தலை நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஒரு மாவட்ட ஊராட்சி தலைவர், ஒரு மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், 26 ஊராட்சி ஒன்றிய தலைவர், 41 ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர், 266 கிராம ஊராட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட மொத்தம் 335 பதவிகளுக்கு வரும் 30ம் தேதி மறைமுக தேர்தல் நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.