சென்னை: வகுப்புவாத தீயசக்திகளுக்கு தயவு செய்து இரையாகி விடாதீர்கள் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சேலத்தில் 1971ல் தி.க. சார்பாக பெரியார் பங்கேற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணியில் நடந்த சம்பவங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து கூறியிருப்பது பலத்த சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. அரசியலுக்கு வராத நிலையில் ரஜினிகாந்த் இத்தகைய அரசியல் சார்பான கருத்துகளை தவிர்த்திருக்க வேண்டும். சமூக நீதியை வழங்குவதற்கு தமது வாழ்நாளை அர்ப்பணித்த பெரியாரை சிறுமைப்படுத்துகிற வகையில் கருத்து கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். 1971 சம்பவம் குறித்து கருத்து கூறுகிற நடிகர் ரஜினிகாந்த், துக்ளக் ஆசிரியர் சோ 1992 டிசம்பர் 6ம் நாள் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து அடுத்து வெளிவந்த துக்ளக் வார இதழின் அட்டைப் படத்தில் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க, கருப்பு வர்ணத்தை பூசி தலையங்கத்தில் ‘அயோத்தில் நடந்த அயோக்கியத்தனம்” என்று அதன் ஆசிரியர் சோ விமர்சனம் செய்ததை ஏன் நினைவுகூரவில்லை.