×

வெற்றி வரலாறு தொடரட்டும்: திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: வெற்றி வரலாறு தொடரட்டும் என்று தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இதுகுறித்து, அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடந்த தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில் முக்கியமான ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. உள்ளாட்சித் தேர்தலில் கழகத்திற்கு மாபெரும் வெற்றியை வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தேர்தலை உடனடியாக நடத்திட வேண்டும். மீதமுள்ள ஒன்பது மாவட்டங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும். தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க அனுமதிக்க மாட்டோம் என தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு அறிவித்திட வேண்டும்.
இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை என்ற அதிமுக அரசின் வஞ்சக நாடகத்திற்கு கண்டனம். இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும். அதிமுக அரசின் அடுக்கடுக்கான தோல்விகளை மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்தி அதிமுகவின் முகமூடியைக் கிழித்தெறிய சபதம். இவைதான் அந்தத் தீர்மானங்கள்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என முழுமையாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றிருந்தால் தி.மு.க கூட்டணி, 80 சதவீத வெற்றியினைப் பெற்றிருக்கும். ஆட்சியாளர்களால் நிச்சயம் அந்த வெற்றியைப் பெற முடியாது என்பதால்தான், கிராம ஊராட்சிகளுக்கு மட்டும் தேர்தலை நடத்தினால் அ.தி.மு.க. வெற்றி பெற்றுவிடும் என மனப்பால் குடித்து தேர்தல் நடத்தினார்கள். ஆனால், கிராமப்புற மக்களும் தி.மு.க.வுக்குத்தான் வெற்றியைத் தந்திருக்கிறார்கள். இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை அதிர்ச்சியடைந்தார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றோம். அதில் சில இடங்களில் உள்ளாட்சித் தேர்தலில் தொய்வு தெரிகிறது. தயக்கமும் சுணக்கமும் ஏன் என்பதை ஆலோசனை செய்தாக வேண்டும். திமுக நிர்வாகிகள் உங்களால் முடிந்தளவு பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள். தலைமைக் கழகத்தால்தான் தீர்க்க முடியும் என்கிற விஷயங்களைச் சொல்லுங்கள். பரிசீலித்துத் தீர்த்து வைக்கும்.

நோய் வந்தால் உடனடியாக அதற்கு மருந்து தந்தாக வேண்டும். இல்லாவிட்டால் எந்த மருந்துக்கும் குணமாகாத நோயாக அது மாறிவிடும். சிறு பிரச்னைதானே என்று மறைத்தால், அது உள்ளுக்குள்ளேயே வளர்ந்து பெரிய பிரச்னையாக ஆகிவிடும். அவசியமான ‘ஆபரேஷனை’ செய்துதான் ஆக வேண்டும். கூடினோம் கலைந்தோம் என்று எப்போதும் இருந்ததில்லை. இனியும் இருக்க முடியாது. தனிமனிதர்களின் விருப்பு, வெறுப்பு, சுயநலத்தைவிட இயக்கத்தின் லட்சியமும் அதற்கான வெற்றியும் முதன்மையானது. கலைஞர் நமக்கு அந்த எண்ணத்தைத்தான் ஊட்டி வளர்த்திருக்கிறார். எனவே, தனிப்பட்ட முறையில் ஓரிருவர் தவறு செய்திருந்தாலும் அவர்களைக் காப்பாற்றுவதற்கு யாரும் முயற்சிக்கக் கூடாது. இயக்கம்தான் நமக்கு முக்கியம். 9 ஆண்டுகாலமாக நாம் ஆட்சியில் இல்லை. இன்னும் ஓராண்டு காலத்திற்குள் மீண்டும் திமுக ஆட்சி மலரும். யாரையும் எதிர்கொள்ளும் வலிமையும், வாய்மையும் தி.மு.க.வுக்கு இருக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவன் நான். அந்த நம்பிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கிறது.

நமது வெற்றியை யாராலும் தடுத்திட முடியாது என்பதை கூட்டத்தில், திமுக நிர்வாகிகளிடம் எடுத்துரைத்தேன். அதையேதான் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளான உங்களிடமும் சொல்கிறேன். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சி வார்டு - ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு வருகிற 31ம் தேதியன்று கழக வரலாற்றில் திருப்புமுனை பல தந்த மலைக்கோட்டையாம் திருச்சியில் நடக்கிறது. மாவட்ட செயலாளர் கே.என்.நேரு மாநாட்டிற்கான ஏற்பாடுகளை முன்னின்று மிகப் பிரமாண்டமாக செய்து கொண்டிருக்கிறார். வெற்றி பெற்ற அனைவரும் அதில் பங்கேற்று, மக்கள் தொண்டாற்றிடப் பயிற்சி பெற்றிட வேண்டும்.

இம்முறை வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் அடுத்த வாய்ப்பில் கழகத்தின் வெற்றியை மனதில் கொண்டு செயலாற்றிட வேண்டும். நமது வெற்றிப்பாதையில் குறுக்கிடக்கூடிய தடைகள் வெளிப்புறத்தில் இருந்து வந்தாலும், உட்புறத்திலிருந்து உருவாக்கப்பட்டாலும், அதனைப் பக்குவமாகத் தகர்த்தெறிந்து முன்னேறிடும் ஆற்றல் உங்களிடம் உண்டு. உள்ளாட்சிக் களத்தில் 2020 வெற்றி அதனைத் தொடர்ந்து 2021ல் தமிழகத்தில் நல்லாட்சி அமைந்திடும் வகையில் மகத்தான வெற்றி என கழகத்தின் வெற்றிப் பயணம் கம்பீரமாகத் தொடர்ந்து கொண்டேயிருக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : MK Stalin ,DMK , DMK, MK Stalin, letter
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...