சென்னை:சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் பொது செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். பின்னர் பொது செயலாளர் டி.ராஜா கூறியதாவது: நாடு முழுவதும் சி.ஏ.ஏ, என்ஆர்சி, என்பிஆருக்கு எதிராக போராடிய பலர் இறந்து இருக்கிறார்கள். தேசிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்து செல்வது குறித்து திமுகவுடன் ஆலோசித்து இருக்கிறோம். குடியுரிமை சட்டம் என்பது ஏழைகளுக்கு எதிரானது சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஒருமுகப்படுத்தி பார்க்கும்போது இது ஏழைகளுக்கு எதிரானது.குடியுரிமை சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது மட்டும் இல்லை. இது அனைத்து ஏழைகளுக்கும் எதிரானது. ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் கருவியாக பிஜேபி செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் பாசிச தாக்குதல், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து அனைவரும் போராட வேண்டும்.