வேலூர்: காட்பாடி அருகே மேல்மாயில் கிராமத்தில் நடந்த காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் ஒருவர் பலியானார். 19 பேர் படுகாயமடைந்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மேல்மாயில் கிராமத்தில் 128வது ஆண்டு காளை விடும் விழா நேற்று நடந்தது. இதற்காக வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 171 காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. குடியாத்தம் ஆர்டிஓ (பொறுப்பு) தினகரன், தாசில்தார் சுஜாதா முன்னிலையில் காளை விடும் விழா தொடங்கியது.குறிப்பிட்ட தூரத்தை மிக குறைந்த நேரத்தில் கடந்த காளைகள் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டன. இவ்விழாவில் காளை ஓடும் பாதையில் வளைவான இடத்தில் அதிகளவில் இளைஞர்கள் குவிந்தனர். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை விரட்டுவதற்காக அடிக்கடி தடியடி நடத்தினர். அப்போது ஏற்பட்ட குழப்பம், கூச்சலை கட்டுப்படுத்த மீண்டும், மீண்டும் போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து நடந்த விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்தன.