புதுடெல்லி: நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் தங்கும் விடுதிகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க குழு ஒன்றை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மலைப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி பல சமயங்களில் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து விடுவது வழக்கமாக உள்ளது. யானைகள் தாங்கள் பிறந்த நாளில் இருந்து தங்கள் வழித்தடத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும். இவை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்காது. ஆனால், மனிதர்கள் தங்களுடைய சுயநலத்துக்காக வனங்களை அழித்து தங்கள் இஷ்டத்துக்கு குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொள்வதால், யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பாதிக்கப்படுகின்றன. இதனால்தான் வன உயிரினங்கள் மற்றும் மனிதர்கள் மோதல் அடிக்கடி நடக்கிறது.
இதேபோல், நீலகிரியில் குடியிருப்புகளும் தங்கும் விடுதிகளும் அதிகளவில் கட்டப்படுவதால் யானைகளின் நீர்வழித்தடம் அழிந்து வருவதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், யானைகளின் வலசை பாதையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், புதிதாக கட்டிடங்கள் கட்ட தடை விதிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் நசீர், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘யானைகள் வழித்தடத்தில் யாரும் ஆக்கிரமிப்பு செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் தங்கும் விடுதிகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற தலைமையில் மூன்று பேர் அடங்கிய குழு அமைக்கப்படும்’’ என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.