டாவோஸ்: சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில், உலக பொருளாதார கூட்டமைப்பின் 2020ம் ஆண்டு உச்சி மாநாடு, நேற்று முன்தினம் தொடங்கியது. இம்மாநாடு நாளையுடன் முடிகிறது. இதில் கலந்து கொண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பேசியதாவது: அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க முக்கியத்துவம் அளிக்கின்றன. இதனால் அனைவருக்கும் சுதந்திரமான, வெளிப்படையான இணைய தள சேவை தேவைப்படுகிறது. அதே நேரம், அது பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும். எனவே, தகவல் பாதுகாப்பு கட்டமைப்பு விதிகளை உருவாக்குவதில் அனைத்து நாடுகளும் ஒன்று சேர வேண்டும். இணைய தளம் என்பது மிக உயர்ந்த, அரிய கண்டுபிடிப்பாகும். மனித வாழ்வில் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றி உள்ளது. அப்படி, அண்மையில் கண்டு வியந்தது தான், மருத்துவம், வானிலை ஆகியவற்றில் முக்கிய பங்காற்றும் செயற்கை நுண்ணறிவு திறன். இதில், குவாண்டம் கம்யூட்டிங் முக்கிய பங்கு வகிக்கும்.