முட்டுக்காடு கடலோரம் விதிமீறி கட்டப்பட்டுள்ள சொகுசு பங்களாவை இடிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள முட்டுக்காடு கடற்கரையோரம் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள சொகுசு பங்களாவை இடிக்க உத்தரவிட்டுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலர் கட்டிட விதிகளுக்கு முரணாக பெரிய அளவில் பங்களாக்களையும், பண்ணை வீடுகளையும் கட்டியுள்ளதாகவும், இந்த விதிமீறல் பங்களாக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், முட்டுக்காடு பகுதியில் உள்ள சொகுசு பங்களாக்கள் விதிகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் சிறப்பு அரசு பிளீடர் மனோகரன் ஆஜராகி, முட்டுக்காடு படகு குழாம் அருகே உள்ள கடற்கரையில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளும், கடலோர ஒழங்குமுறை மண்டல அதிகாரிகளும் இணைந்து ஆய்வில் ஈடுபட்டனர். இந்த ஆய்வில், கட்டுமானங்கள் கட்ட தடை செய்யப்பட்ட பகுதியில் சொகுசு பங்களாக்கள் கட்டப்பட்டிருப்பதாகவும், கடற்கரையில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்குள் கட்டப்பட்டுள்ள இந்த சொகுசு பங்களாக்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டியவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதியிடம் தெரிவித்து ஆய்வு அறிக்கையையும் தாக்கல் செய்தார்.

அப்போது பங்களா உரிமையாளர் ஒருவர் சார்பில் ஆஜரான வக்கீல், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கட்டிடத்தின் விதிமீறல் பகுதிகளை அகற்ற கால அவகாசம் வேண்டும் என்று கோரினார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், கேரள மாநிலம் மரடுவில் கடலோர ஒழங்குமுறை மண்டல விதிகளை பின்பற்றாமல் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் இடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் தான் விதிமீறல் கட்டிடங்கள் வராமல் இருக்கும். முட்டுக்காடு கடற்கரையோரம் விதிகளை மீறி சர்வே எண் 114ல் கட்டப்பட்டுள்ள 5 சொகுசு பங்களாவின் மின்சாரம், தண்ணீர் விநியோகத்தை துண்டிக்க வேண்டும்.

அந்த பகுதியில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு முரணாக கட்டப்பட்டுள்ள ஒரு சொகுசு பங்களாவை இடிக்க வேண்டும். காஞ்சிபுரம் கலெக்டர், காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் பங்களா இடிக்கப்பட வேண்டும். இதற்கான செலவை அந்த சொகுசு பங்களாவின் உரிமையாளர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர். முட்டுக்காடு கடற்கரையோரம் விதிகளை மீறி சர்வே எண் 114ல் கட்டப்பட்டுள்ள 5 சொகுசு பங்களாவின் மின்சாரம், தண்ணீர்  வினியோகத்தை துண்டிக்க வேண்டும்.

Related Stories: