பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் அமைக்கப்பட்டிருந்த கட்டண சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் இரண்டேமாதங்களில் பழுது ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே 8 கிமீ தொலைவில் கொடைக்கானல் மலையடிவாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் பெரியகுளம் பகுதியில் மழை பெய்யும்போது, இந்த அருவிக்கு நீர் வரத்து இருக்கும். இயற்கை சூழலில் அமைந்துள்ள இந்த அருவிக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளி மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப்பயணிகளின் வருகை தருகின்றனர்.
அருவிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் குடிநீர் தேவைக்காக வனத்துறையின் சார்பில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்ப இயந்திரம் திறக்கப்பட்டது. சுற்றுலாப்பயணிகள் கட்டணம் செலுத்தி இதன் மூலம் சுத்தமான குடிநீரை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த ஆர்ஓ பிளாண்ட் திறக்கப்பட்டு 2 மாதங்களில் பழுதடைந்தது. ஆனால் இதுவரை இந்த இயந்திரம் சரி செய்யப்படவில்லை. இதனால் சுற்றுலாப்பயணிகள் அருவி நீரையே குடிநீருக்கு பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை உடனடியாக பழுது நீக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.