திரிணாமுல் பாணியில் காங்கிரஸ்: CAA-க்கு எதிராக வரும் 30-ம் தேதி கேரள மாநிலம் வயநாட்டில் மாபெரும் பேரணி: ராகுல் காந்தி அறிவிப்பு

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரள மாநிலம் வயநாட்டில் வரும் 30-ம் தேதி பேரணி நடைபெறும் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம்:

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியா வந்துள்ள சிறுப்பான்மையினரான, இந்துக்கள், கிறிஸ்தவர்களுக்கு உள்ளிட்டோருக்கு குடியுரிமை வழங்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு  நடைமுறைக்கு வந்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில மாநிலங்கள் சிஏஏ சட்டத்தை திரும்ப பெறக்கோரி சட்டமன்றத்தில் சிறப்பு  தீர்மானங்களும் இயற்றி உள்ளன.

உச்சநீதிமன்றம் மறுப்பு:

இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, காங்கிரஸ், திமுக, மக்கள் நீதி மய்யம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில், உச்சநீதிமன்றத்தில் 143 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம் 18-ம் தேதி இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததோடு வழக்கின் விசாரணையை அரசியல் சாசன  அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.

நாடு முழுவதும் போராட்டம்:

இதற்கிடையே, மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், வடகிழக்கு மாநிலங்கள் கொதிப்புடன் காணப்படுகின்றன. அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா,  மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுராவில் மாநகர அமைப்பினர் கல்லூரிகளை மூடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த 8 வடகிழக்கு மாநிங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அசாமில்  காலை முதலே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தொங்கிவிட்டன. குடியுரிமை சட்டத் திருத்தத்தைத் திரும்பப்பெறக் கோரி மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீண்டும் பேரணி நடத்தி வருகிறார்.  டார்ஜீலிங் நகரில் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

ராகுல் காந்தி பேரணி:

இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாபெரும் பேரணி நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். கேரள மாநிலம்  வயநாட்டில் வயநாடு தொகுதி எம்.பி ராகுல் காந்தி தலைமையில் வரும் ஜனவரி 30-ம் தேதி சிஏஏ-வுக்கு எதிராக பேரணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க வாய்ப்புள்ளதாக  கூறப்படுகிறது. பேரணியில் கலவரம் எதும் நடைபெறாமல் இருப்பது தொடர்பாக மாநில காவல்துறை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

Related Stories: