சென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நடந்த தேர்தலில் காலியாக உள்ள 335 இடங்களுக்கு வரும் 30ம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இதனைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 11ம் தேதி மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி துணைத்தலைவர், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர், ஒன்றிய துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர், 26 ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர், 42 ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் 266 ஊராட்சித் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.